செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுடன் ஆலோசனை

Published On 2018-08-28 07:53 GMT   |   Update On 2018-08-28 07:53 GMT
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தற்போது நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களிடம் அறிவுறுத்தினார். #Parliamentelection #EdappadiPalaniswami
சென்னை:

பாராளுமன்றத்திற்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்டி இந்த சாதனையை உருவாக்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு பட்டதால் தொண்டர்கள் மத்தியில் மனநிலை மாறியுள்ளது.



அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வை தயார்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் சில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்று 17 மாதங்கள் ஆகிறது. இந்த 17 மாதங்களில் அவர் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் ஓட்டுகேட்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. எனவே தற்போது நடந்து வரும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடிப்பதற்கு கலெக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும் கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் தனித்தனியாக பேசி ஆய்வு நடத்துகிறார். மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கிறார்.

குறிப்பாக குடிநீர், வீட்டு வசதி திட்டம், பொது வினியோக திட்டம், விவசாய கடன் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிகிறார். இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு முக்கிய திட்டங்களை ஓரளவிற்கு முடித்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களை கவர்வதற்காக தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தை தாராளமாக செய்ய கூறியுள்ளார். கிராமங்களில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகளிலும் கலெக்டர்கள் கவனம் செலுத்துமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். #Parliamentelection #EdappadiPalaniswami

Tags:    

Similar News