செய்திகள்

வில்லியனூர் அருகே மதுக்கடையில் மோதல் - தனியார் நிறுவன ஊழியர் கவலைக்கிடம்

Published On 2018-08-27 15:16 IST   |   Update On 2018-08-27 15:16:00 IST
வில்லியனூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது30). இவர் சேதராபட்டில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த அய்யனார் (30) இவர் ஒதியம்பட்டில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை இவர்கள் இருவரும் பிள்ளையார்குப்பம் கூனிமுடக்கு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். மதுபான கடை வாயிலில் இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (30) மற்றும் இவரது நண்பர்கள் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகியோருக்கும் இடையே மோட்டார் சைக்கிள்கள் உரசிக்கொண்டதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இதுமோதலாக மாறியது.

ஆத்திரம் அடைந்த சந்திரன் தரப்பினர் இரும்பு பைப்பாலும், தடியாலும் அழகப்பனையும், அய்யனாரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அய்யனார் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் பாண்டியன், பாஸ்கர், அருள் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News