செய்திகள்

மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை

Published On 2018-08-24 10:35 GMT   |   Update On 2018-08-24 10:35 GMT
வைகையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பூர்வீக பாசன பகுதியாக உள்ள மானா மதுரைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி பூர்வீக வைகை பாசன பகுதியாகும். மழை பெய்து வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளம்போல் வரும்போது தான் கண்மாய்களில் தண்ணீரை தேக்க முடியும்.

வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட மானாமதுரை பகுதி வந்து சேரவில்லை.

வைகையில் வரும் தண்ணீரை நம்பி இடைக் காட்டூர், கட்டிகுளம், கீழப்பசலை ஆகிய கிராம விவசாயிகள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தண்ணீர் வருகைக்காக காத்து இருக்கின்றனர்.

வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர மானாமதுரை நகர் பகுதியில் உள்ள ஆதனூர் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதை சுற்றியும் வைகை ஆற்றிலும் சீமை கருவேல் மரங்களை அகற்றாததால் வறண்டு தடுப்பணை கட்டியும் வீணாக உள்ளது.

குடிநீர் திட்டங்களில் உள்ள நீர் ஊற்றுகளும் வறண்டதால் மானாமதுரை பகுதியில் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வைகையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பூர்வீக பாசன பகுதியாக உள்ள மானா மதுரைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News