செய்திகள்

தவளக்குப்பத்தில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் - 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-08-24 15:29 IST   |   Update On 2018-08-24 15:29:00 IST
தவளக்குப்பத்தில் கணவன்- மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:

புதுவை முத்தியால் பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் முகமது மீரான் (வயது 36). இவரது மனைவி லத்திஜா (32). கடந்த சில ஆண்டுகளாக முகமது மீரான் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சமீபத்தில் விடுமுறையில் வந்திருந்தார்.

இதற்கிடையே தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் இந்திரா நகரில் வசிக்கும் லத்திஜாவின் அக்காள் மகள் யாசின் அவரது கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபித்து கொண்டு எங்கேயோ சென்று விட்டார்.

நேற்று இது பற்றி விசாரிக்க முகமது மீரானும், அவரது மனைவி லத்திஜாவும் இந்திரா நகருக்கு சென்றனர். அங்கு யாசினின் கணவர் அப்துல் பாசிக்கிடம் லத்திஜா விசாரித்து கொண்டு இருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அப்துல் பாசிக் தகாத வார்த்தைகளால் திட்டி லத்திஜாவை தாக்கினார்.

இதனை முகமது மீரான் தட்டிக்கேட்ட போது அப்துல் பாசிக்கும், அவரது உறவினர் சபிபுல்லாவும் சேர்ந்து முகமது மீரானை கல்லால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த முகமது மீரான் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்பாசிக் மற்றும் அவரது உறவினர் சபிபுல்லா ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News