செய்திகள்

காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் - குழந்தையுடன் மாயமான பெண் கதி என்ன?

Published On 2018-08-23 09:33 GMT   |   Update On 2018-08-23 09:33 GMT
குடும்ப தகராறில் தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்த பெண், குழந்தையுடன் மாயமானதால் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த பிச்சைமுத்து-சுதா தம்பதியின் மகள் ரம்யா (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கனகசபாபதிக்கும் (35) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாஸ்விக் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.

நேற்று கனக சபாபதிக்கும், ரம்யாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரம்யா வீட்டை விட்டு தனது குழந்தையுடன் வெளியேறினார். பின்னர் அவர் மொபட்டில் தனது குழந்தையுடன் புறப்பட்டு சென்றார். இதனிடையே அவர் தற்கொலை செய்து கொள்வதாக தனது தாயார் சுதாவிடம் செல்போன் மூலம் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் பெற்றோர், அவர் குழந்தையுடன் மாயமானது குறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் கொடுமுடி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் அவர்கள் தேடியுள்ளனர். இதையடுத்து நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி ஆற்று பகுதிக்கு அவரது பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

அங்கு ரம்யா வந்த மொபட்டும், அவரது செல்போனும் கிடப்பதை பார்த்து பொதுமக்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் மொபட் மற்றும் செல்போனை கைப்பற்றி ரம்யா மற்றும் அவரது குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் மாயமான ரம்யா கதி என்ன? என்பது மர்மமாக உள்ளது. அவர் செல்போனில் சொன்னபடி மகனுடன் காவிரி ஆற்றில் குதித்தாரா? அல்லது கணவர் குடும்பத்தை மிரட்டுவதற்காக அவர் தற்கொலை மிரட்டல் விடுத்து மகனுடன் மாயமானாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

இதுதொடர்பாக காவிரி கரையோர பகுதியில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News