செய்திகள்

விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் நகை பறிப்பு

Published On 2018-08-21 15:48 IST   |   Update On 2018-08-21 15:48:00 IST
விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை மர்மநபர் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள திருவெம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி சசிகலா (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம வாலிபர் ஒருவர் சசிகலாவின் அருகே வந்தார். அவர் உனது நகையை கழற்றி கொடு என்று கூறி கத்தியை காட்டி சசிகலாவை மிரட்டினார்.

ஆனால், அவர் நகையை கழற்றி கொடுக்க மறுத்தார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம வாலிபர் திடீரென சசிகலாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

அதிர்ச்சி அடைந்த சசிகலா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டவாறே அந்த வாலிபரை விரட்டி சென்றார். ஆனால், அதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இது குறித்து மங்களம் பேட்டை போலீசில் சசிகலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News