செய்திகள்

கடலூரில் பட்டப்பகலில் 4 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2018-08-18 15:15 IST   |   Update On 2018-08-18 15:15:00 IST
கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ஜெகதாம்பாள் நகரை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (வயது 75). இவர் இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மர்ம மனிதன் ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தான்.

அப்போது அந்த நகையை ஜெகதாம்பாள் பிடித்தார். இதனால் பாதி நகையை மட்டும் அறுத்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபருடன் ஏறிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதேபோல் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அகிலபிரியா (33), கடலூர் கப்பியம்பேட்டை சேர்ந்த சங்கீதா (25), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு சேர்ந்த ஜோதி (19) ஆகிய 3 பேரும் தனித்தனியாக அந்தந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து செல்லும் போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் வந்து நகையை பறித்தனர்.

ஆனால் இந்த நகை பறிப்பில் வண்டிபாளையத்தை சேர்ந்த அகில பிரியா நகையை மட்டும் பறித்து சென்றனர். இதில் சங்கீதா மற்றும் ஜோதி ஆகியோர் நகையை பிடித்து கொண்டதால் அவர்களிடம் இருந்து நகையை பறிக்க முடியவில்லை.

இந்த நகை பறிப்பு சம்பவத்தில் மூதாட்டி ஜெகதாம்பாள் மற்றும் அகில பிரியா ஆகியோரிடம் இருந்து சுமார் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடலூரில் இன்று பட்டப்பகலில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 4 பெண்களிடம் மர்ம மனிதர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News