செய்திகள்
கீரம்பூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

விருத்தாசலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி எரிப்பு- நிர்வாகிகள் சாலைமறியல்

Published On 2018-08-17 16:21 IST   |   Update On 2018-08-17 16:21:00 IST
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீரம்பூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி கொடிகம்பம் நடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு யாரோ? மர்மமனிதர்கள் கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை கீழே இறக்கி அதனை தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடி எரிக்கப்பட்டு கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து கீரம்பூர் பஸ்நிறுத்தத்துக்கு ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கொடியை எரித்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம்-வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொடியை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News