செய்திகள்

திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2018-08-13 10:05 GMT   |   Update On 2018-08-13 10:05 GMT
திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
பேரையூர்:

திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காரைக்கேணி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மனைவி வைகை (வயது 58). ஓய்வு பெற்ற ஆசிரியை.

இவர் இன்று காலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கமீனாள் என்பவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். ஒருவன் ஹெல்மேட் அணிந்திருக்க, மற்றொருவன் குல்லா போட்டிருந்தான்.

அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து வைகை கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வைகை திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்களை விரட்டிச் சென்றனர். ஆலம்பட்டி விலக்கு வரை விரட்டியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் வைகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News