செய்திகள்

ஜவுளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது

Published On 2018-08-11 14:38 IST   |   Update On 2018-08-11 14:38:00 IST
ஈரோட்டில் ரூ.2 லட்சம் பணம் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53) இவர் டிவிஎஸ் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

நீதி மோகன் என்பவர் இவரது ஜவுளிக்கடையில் 18 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நீதி மோகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து நீதி மோகனுக்கு ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு கனி மார்க்கெட்டில் ஒன்றாக இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

பின்னர் நீதி மோகனுக்கும் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வி‌ஷயத்தில் நீதி மோகனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசு சமரசம் பேசினார்.

இதனால் திருநாவுக்கரசர் மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்த காதர் ஷெரிப் மற்றும் முஸ்தபா ஆகியோர் மூலபாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர்.

அங்கு திருநாவுக்கரசின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்’’ என்று கேட்டு மிரட்டினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து திருநாவுக்கரசு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News