செய்திகள்

திருக்குவளை அருகே இன்று மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

Published On 2018-08-07 09:40 GMT   |   Update On 2018-08-07 09:40 GMT
திருக்குவளை அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன் மனைவி பலியாகினர். இவர்களது மகன்- மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர்:

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ராமன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 45).

இந்த நிலையில் இவர்களது மகள் விஜயலட்சுமிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் திருப்பூரில் வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணனின் மகன் சவுரிராஜன், ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தான் வசித்து வந்த கூரைவீட்டின் மேற்கூரை பகுதியை மாற்ற முடிவு செய்தார்.

இதையொட்டி இன்று காலை பாலகிருஷ்ணன், தென்னங்தட்டிகளை வைத்து மேற்கூரையை கம்பியால் கட்டி கொண்டிருந்தார். அவர் அருகே நின்று கொண்டு மனைவி நாகம்மாள், மகள் விஜயலட்சுமி, மகன் சவுரிராஜன் ஆகியோர் உதவி செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பாலகிருஷ்ணனின் கை , அங்கிருந்த மின்கம்பி மீது பட்டது. இதில் அவரை மின்சாரம் தாக்கியது.

மேலும் அருகில் நின்ற நாகம்மாள், விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகிய 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து வீடு அருகே உள்ள திருப்பூண்டி வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

அங்கு விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலியான சம்பவம் திருக்குவளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News