செய்திகள்

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2018-08-05 17:28 GMT   |   Update On 2018-08-05 17:28 GMT
புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்: 

புதுச்சேரியில் இருந்து ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆண்டகளூர்கேட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற கார் ஒன்று குமாரமங்கலம் பிரிவு சாலை அருகே திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பரிசோதனை செய்தனர். அப்போது அதில் 6,034 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மதுபாட்டில்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் பறிமுதல் செய்வதை அறிந்த கார் டிரைவர் ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த மதுபாட்டில்களை திருச்செங்கோட்டை சேர்ந்த ஜெகதீசன் (வயது 40) என்பவர் வாங்கி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்தனர்.
Tags:    

Similar News