செய்திகள்

வீடியோ காட்சிகளை கண்டு பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்து- பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

Published On 2018-08-04 04:00 IST   |   Update On 2018-08-04 04:00:00 IST
‘வீடியோ’ காட்சிகளை கண்டு பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஊறு விளைவிக்கும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. #TNGovernment #homebirthattempt
சென்னை:

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால கவனிப்பு வழங்குவதற்கு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் (நர்சுகள்) மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது. தமிழகத்தில் அனைத்து பிரசவங்களுமே மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

‘வீடியோ’ காட்சிகளைப் பார்த்துவிட்டோ, திரைப்படங்களைப் பார்த்துவிட்டோ, பிரசவம் பார்க்கலாம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல. கர்ப்பிணித்தாயின் உயிருக்கு ஊறு விளைவிக்கும். இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது என எச்சரிக்கப்படுகிறது.

கணவனையும், குடும்பத்தாரையுமே சார்ந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படும் போது அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.



தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 82-ன் படி தாய்சேய் நலத்தை மேம்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தாய்சேய் நலன் காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசு டாக்டரையோ, கிராமம் மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ, பிற அலுவலர்களையோ தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

பொதுமக்கள் இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102, 104 மற்றும் பொது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி 044-24350496, 24334811, 9444340496 ஆகிய எண்களை தொடர்புக் கொள்ளலாம்.

மேலும் 24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்சேய் நல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார். #TNGovernment #homebirthattempt
Tags:    

Similar News