நடை பயணத்துக்கு தடை விதித்தது ஜனநாயக விரோதம் - பாலகிருஷ்ணன் பேட்டி
திருவண்ணாமலை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசும் மாநில அரசும் 8 வழி பசுமை சாலையை சென்னையிலிருந்து சேலம் வரை அமைக்க உள்ளது. இந்த சாலை தேவையற்றது. சாலை அமைப்பதற்காக நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஆண்களையும் பெண்களையும் விரட்டுகின்றனர். தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பை நடத்துகின்றனர். இந்த சாலைக்காக மலைவளம், நிலவளம், வன வளம் மற்றும் மரங்கள் எல்லாம் அழித்து எதற்காக சாலை அமைக்க வேண்டும்.
வனங்களை அழித்து இந்த சாலையை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சாலையால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட போவதில்லை. தொழிற்சாலைகளும் புதிதாக அமையப் போவதில்லை.
தமிழகத்தில் 50,000 சாலைகள் போடப்பட்டுள்ளதாக சட்ட மன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர். சாலை போட்டால் தொழிற்சாலை வந்துவிடும் பொருளாதாரம் வளர்ந்து விடும் என்று சொல்லுவது ஏமாற்று வேலை. தவறான கருத்துக்களை சொல்லி மக்களை ஏமாற்றி சாலைகளை போடுகின்றனர்.
இந்த சாலை திட்டத்திற்காக ஒரு கிலோ மீட்டருக்கு சராசரியாக 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த அளவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு சாலை எங்கும் அமைக்கப்படவில்லை. இந்த சாலை தங்கத்திலா அமைக்கபட உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் இந்த மோசமான போக்கை கண்டித்து இந்த சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் அறிவித்து உள்ளோம். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கின்றது ஏன் என்று தெரியவில்லை.
போலீசாரின் உத்தரவுக்கு உட்பட்டு அமைதியாக சாலை ஓரத்தில் நடக்கிறோம். அமைதியான முறையில் மக்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் வகையில் நடைபெறும் இந்த நடை பயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad