செய்திகள்

ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கொலை- தலைமறைவான கணவன்-மனைவி பாஸ்போர்ட் முடக்கம்

Published On 2018-07-30 10:01 GMT   |   Update On 2018-07-30 10:01 GMT
புதுவை அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கொலையில் தலைமறைவான கணவன்-மனைவி பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியானகுயிலாப் பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற ரிலையன்ஸ் பாபு (வயது42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 21-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபல தாதா மணிகண்டனின் எதிராளியான ராஜ்குமாருக்கு ஆதரவாக பாபு செயல்பட்டு வந்ததால் தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் பாபுவுக்கும் அவரது உறவினரான ராமுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் பாபுவை தீர்த்துகட்டி இருக்கலாம் என போலீசார் கருதினார்கள்.

இதையடுத்து ராமுவை போலீசார் தேடியபோது அவர் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து ராமு வெளிநாட்டுக்கு தப்பி செல்லாத வகையில் ராமு மற்றும் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News