செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே பெண் கொலை- குற்றவாளி கைது

Published On 2018-07-27 13:43 IST   |   Update On 2018-07-27 13:43:00 IST
அருப்புக்கோட்டை அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பெரியபுளியம்பட்டியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் பெண் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பிரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

மேலும் இறந்த பெண் மதுரை சந்தைபேட்டையை சேர்ந்த முத்துபாண்டி மனைவி மேரி என்ற செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை கொலை செய்த மூக்கன், நாகனை கைது செய்தனர்.

மேலும் முதல் எதிரியான பெரியபுளியம்பட்டியை சேர்ந்த முத்தரசனை தேடி வந்தனர். நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து தலைமறைவாகி இருந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கோலியம்மனூர் பகுதியில் மறைந்து இருப்பதாக வந்த தகவலையொட்டி அங்கு சென்று முத்தரசனை 9 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தனர்.
Tags:    

Similar News