செய்திகள்

குன்றாண்டார்கோவில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கிய அமைச்சர்

Published On 2018-07-24 12:48 GMT   |   Update On 2018-07-24 12:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அரசு பள்ளி ஆசிரியருக்கு இந்த ஆண்டுக்கான “கனவு ஆசிரியர்” விருதை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
கீரனூர்:

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைசெயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற புதிய விருதினை தமிழக அரசு இந்த ஆண்டு முதல் வழங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆறு ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் பள்ளியில் மிகசிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியமைகாக புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவருக்கும் இந்த ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா விருதுநகரில் நடந்தது. விழாவில் ஆசிரியர் சுப்பிரமணியனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருது வழங்கினார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி. பள்ளிகல்வித் துறை இயக்குனர், தொடக்க பள்ளி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களையும் பங்கேற்க செய்து வெற்றி பெற செய்துள்ளார். தொழில்நுட்ப பாடங்களையும் நடத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறார்.

விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர்பொதுமக்கள் வாழ்த்துக்களை கூறினர்.
Tags:    

Similar News