செய்திகள்

திசையன்விளையில் பிளஸ்-1 மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-07-22 17:12 GMT   |   Update On 2018-07-22 17:12 GMT
திசையன்விளையில் மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:

நெல்லை டவுனை சேர்ந்த கச்சேரி பாடகர் பாலன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கிருஷ்ணவேணி, மகன் லட்சுமிகாந்த் (வயது 18). லட்சுமிகாந்த் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் பாலன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது குடும்பத்துடன் திசையன்விளை மணலிவிளையில் வாடகை வீட்டில் குடியேறினார். மகள் கிருஷ்ணவேணி பணிபுரிந்த அதே பள்ளியில் மகன் லட்சுமிகாந்தை பிளஸ்-1 சேர்த்தார். 

பாலன் கச்சேரி பாடகர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அதேபோல் நேற்றும் வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகிய 3 பேரும் இருந்தனர். அப்போது மாணவன் லட்சுமிகாந்த், தனது மோட்டார் சைக்கிளை பழுது நீக்க நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் கொடுத்திருப்பதாகவும், அதனை வாங்கி வர ரூ.20ஆயிரம் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.  ஆனால் தன்னிடம் பணம் இல்லை என தாய் சுப்புலட்சுமி கூறிவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் அக்காளிடம் லட்சுமிகாந்த் சண்டையிட்டுள்ளார். பின்பு அவர்கள் இருவரும் வீட்டின்வெளியே வந்து அமர்ந்து விட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் தாயும், மகளும் வீட்டினுள் சென்றனர். 

அப்போது அங்குள்ள அறையில் மாணவன் லட்சுமிகாந்த் தூக்கில் பிணமாக தொங்கினான். தனது பெல்ட்டிலேயே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். இதை பார்த்த தாய் சுப்புலட்சுமி, அக்காள் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவன் உடலை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மோட்டார் சைக்கிளை வாங்கிவர கேட்ட பணத்தை தாய் தர மறுத்ததால் மாணவன் லட்சுமிகாந்த் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News