செய்திகள்
அரியலூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள்: கலெக்டர் பார்வையிட்டார்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூரில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 800 கட்டுப்பாட்டு கருவிகள் வரப்பெற்றுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 80 பெட்டிகளில் 800 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டன.
இந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாசில்தார் (தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம்) முத்துகிருஷ்ணன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு கருவிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.