செய்திகள்
கோப்புப்படம்

தாளவாடி அருகே வீட்டின் முன் கட்டப்பட்ட ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி பலி

Published On 2018-07-20 11:49 GMT   |   Update On 2018-07-20 11:49 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வீட்டின் முன்பு கட்டப்பட்டு இருந்த ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளது. வனப்பகுதியான தாளவாடி அருகே உள்ளது சூசைபுரம்.

இந்த ஊரை சேர்ந்தவர் மாதேவன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மங்கிலி. இவரது வீடும் தோட்டமும் அடுத்தடுத்து உள்ளது.

மங்கிலி தனது வீட்டில் 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை வீட்டின் முன் கட்டி விட்டு படுத்து தூங்குவார். அதே போல் நேற்று இரவும் வழக்கம் போல் வீட்டின் முன் ஆடு- மாடுகளை கட்டி விட்டு மங்கிலி வீட்டில் தூங்கினார்.

இன்று காலை எழுந்து பார்த்த மங்கிலிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது.

இதில் ஒரு ஆட்டின் முக்கால் வாசி உடலை மர்ம விலங்கு தின்று விட்டது. மற்ற 2 ஆடுகளின் குரல் வளையை மர்ம விலங்கு கடித்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

அடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எந்த விலங்காக இருக்கும் என தெரியவில்லை.

ஊருக்குள்ளே ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News