செய்திகள்

இளம்பெண் மர்ம மரணம்: கணவர் உள்பட 4 பேர் கைது

Published On 2018-07-19 17:06 GMT   |   Update On 2018-07-19 17:06 GMT
பெண் மர்மசாவு தொடர்பாக அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி:

ஊட்டி அருகே உள்ள கீழ் தொரையட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (37). ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் இடுஹட்டி கிராமத்தை சேர்ந்த சோபனா (26) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சச்சின் (5) என்ற மகன் உள்ளார்.

சோபனா வீட்டில் இருந்த படியே தையல் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் சோபனா கணவரை பிரிந்து இடுஹட்டி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 5 ஆண்டுகளாக அவர் அங்கு தங்கி இருந்தார். இரு வீட்டாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன் சோபனா தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் சோபனா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சோபனாவின் தந்தை ரவி தேனாடுகம்பை போலீசில் புகார் அளித்தார்.

அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் சோபனாவின் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சோபனாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.

அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சோபனா மரணம் குறித்து சமூக நலத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றனர். இதனை ஏற்று கொண்ட உறவினர்கள் சோபனா உடலை பெற்று சென்றனர்.

இந்த நிலையில் சோபனாவின் கணவர் பிரபு, அவரது தந்தை மணி, தாய் சின்னரோசி, சகோதரர் முருகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வரதட்சணை கொடுமை, துன்புறுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News