செய்திகள்

பாப்ஸ்கோ அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை முயற்சி

Published On 2018-07-16 14:11 GMT   |   Update On 2018-07-16 14:11 GMT
சம்பளம் வழங்கப்படாததால் பாப்ஸ்கோ அலுவலகத்தில் ஊழியர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் நிறுவனமான பாப்ஸ்கோவில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் தினக்கூலி, வவுச்சர் ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க கோரி அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பத்தினர் வறுமையில் வாழ்வதாகவும், குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும் அவர்கள் அரசிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் அரசிடம் போதிய நிதி இல்லாததால் அவ்வப்போது ஒரு சில மாதங்களுக்கான நிலுவை தொகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்த பாப்ஸ்கோ தினக்கூலி ஊழியர் வேலு சம்பளம் வழங்கப்படாத வேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இன்று காலை எலிமருந்தை (வி‌ஷம்) குடித்துவிட்டு தட்டாஞ்சாவடியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

அலுவலகத்திற்கு வந்த சிறிது நேரத்தில் வேலு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக வேலுவை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தொழிற்சங்கம், பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக 3 கடிதங்களை எழுதி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தார்.

Tags:    

Similar News