செய்திகள்

ராஜபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2018-07-16 10:15 GMT   |   Update On 2018-07-16 10:15 GMT
ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியா புரத்தைச் சேர்ந்தவர் பரமன் (வயது38), கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் புறப்பட்டார்.

சங்கரன்கோவில் சாலையில் முதுகுடி விலக்கு பகுதியில் பரமன் வந்தபோது எதிரே மினிலாரி வந்தது. மதுரையில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவில் சென்ற அந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதே வேகத்தில் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மினிலாரி மோதியது. இந்த விபத்தில் பரமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆம்புலன்சு வருவதற்குள் பரமன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் காயம் அடைந்தவர்கள் சாலை போடும் பணி சூப்பர்வைசர் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (44), விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி மணி (24) என தெரியவந்தது.

விபத்துக்கு காரணமான மினி லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆம்புலன்சு தாமதமாக வந்ததால் தான் பரமன் இறந்து விட்டார் என கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

Tags:    

Similar News