செய்திகள்

குட்கா பதுக்கி விற்றால் 6 மாதம் ஜெயில் தண்டனை - உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Published On 2018-07-10 10:36 GMT   |   Update On 2018-07-10 10:36 GMT
தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரித்து உள்ளார்.
கோவை:

கோவை அருகே கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் கோவை நகர பகுதிகளில் குட்கா பதுக்கி வைத்துள்ள கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை தாமஸ் வீதியில் மேக்ராஜா(வயது 30) என்பவருக்கு சொந்தமான குடோனில் நடத்திய சோதனையில் 32 பெட்டிகளில் குட்கா, பான் பராக், பான்மசாலா மற்றும் போதை பொருட்கள் 750 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கடந்த 2-ந் தேதி செல்வபுரம் பகுதியில் ஒரு குடோனில் இருந்து 1.5 டன் எடை கொண்ட குட்கா பதுக்கிய குடோனுக்கு சீல் வைத்தனர்.

அதற்கு முன்னர் கோவை ராஜவீதி, தாமஸ் வீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் 4 டன் அளவுக்கு குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் குடோன்களை வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைத்து பிரித்து அனுப்புகின்றனர். கோவையில் பறிமுதல் செய்யப்படும் குட்கா பாக்கெட்டுகள் பெங்களூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு குட்கா, பான் மசாலாவுக்கு தடை இல்லை.

இதனால் அங்கு உற்பத்தி செய்து தமிழகத்துக்கு ரகசியமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இங்கிருந்து கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வந்துள்ளது. எனவே சோதனையை தீவிரப்படுத்த உள்ளோம்.

பறிமுதல் செய்த குட்கா பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து உடனடியாக ஆய்வுக்காக அனுப்பி விடுகிறோம். ஆய்வு அறிக்கை வந்ததும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதில் 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News