தூத்துக்குடியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது 5 வயது குழந்தை நந்தினி நேற்று வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தகரத்தை வைத்து மூடி இருந்தனர்.
அதை கவனிக்காத குழந்தை நந்தினி தொட்டியின் மீது நடந்து சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். இதில் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதனிடையே நந்தினியை காணாமல் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் நந்தினி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.