செய்திகள்

குற்றச்செயல்களை தடுப்பதற்கு சென்னையில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு

Published On 2018-07-05 16:05 IST   |   Update On 2018-07-05 16:05:00 IST
போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக சென்னையில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை:

ராயப்பேட்டை போலீஸ்காரர் ராஜவேலுவை தலையில் சரமாரியாக வெட்டிய ரவுடி ஆனந்தன், போலீஸ் என்கவுண்டரில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டான்.

வேளச்சேரியில் வட மாநில வங்கி கொள்ளையர்கள் 5 பேர் ஒரே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் 6 ஆண்டுகள் கழித்து சென்னையில் போலீசார் ரவுடி ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போலீஸ் என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் பலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

சென்னையில் ரவுடிகள் ஏபிளஸ், ஏ.பி.சி. என 4 பிரிவுகளாக தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் அனைவரையும் பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தலைமறைவு ரவுடிகளை பட்டியல் எடுத்து அனைவரையும் சிறையில் தூக்கி போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் துணை கமி‌ஷனர்கள், தங்களது பகுதியில் உள்ள ரவுடிகளை இன்ஸ்பெக்டர்கள் மூலமாக தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி பிரபல ரவுடி பினு தனது கூட்டாளிகள் 75 பேருடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து ரவுடிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதன்பின்னர் ரவுடிகள் கண்காணிப்பு தீவிரமானது. தலைமறைவு ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓடிய ரவுடி பினுவை என்கவுண்டரில் போட்டுத்தள்ள போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. இதனால் பயந்து போன பினு சரண் அடைந்தான். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட பினு 115 நாள் சிறை வாசத்துக்கு பின்னர் நிபந்தனை ஜாமீனில் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியில் வந்தான். மாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையை மதிக்காமல் பினு தலைமறைவாகி விட்டான்.

இந்த நிலையில்தான் ரவுடி ஆனந்தன் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இறையாகியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மீண்டும் தொடங்கி உள்ள ரவுடிகள் வேட்டை பீதியை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiEncounter
Tags:    

Similar News