செய்திகள்

தருமபுரியை சேர்ந்த கார் டிரைவர் கொலை - மனைவி-2 மகன்கள் கைது

Published On 2018-07-02 07:13 GMT   |   Update On 2018-07-02 07:13 GMT
தருமபுரியை சேர்ந்த கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

தருமபுரியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது44). இவரது மனைவி கவிதா (37) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிவேல் பெங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றினார். பெங்களூரு சந்திராநகர் லே-அவுட் அருந்ததிநகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்தார்.

நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து விட்டு அவர் தூங்கி விட்டார். தினம் தினம் தகராறு செய்யும் அவருடன் வாழ்வதை விட அவரை கொன்று விடுவதே மேல் என்று நினைத்து அவரது மனைவியும், மகன்களும் அவரது கழுத்தை நெறித்து கொன்று விட்டனர்.

நேற்று காலை அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததாக கூறிய அவரது குடும்பத்தினர் அவரது உடலை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அவரது உடலை பரிசோதித்த தனியார் ஆஸ்பத்திரி அவர் இறந்து பல மணி நேரம் ஆனதை கண்டுபிடித்து விட்டார். உடலை எடுத்து செல்லுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறி விட்டது.

பின்னர் கவிதாவும், அவரது மகன்களும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பழனிவேலின் உடலை தருமபுரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அவரது வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இது குறித்து சந்திராநகர் லே-அவுட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பழனிவேல் பிணத்தை கைப்பற்றி விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அங்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பழனிவேலின் மனைவி மற்றும் மகன்களை போலீசார் விசாரித்தபோது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். #Tamilnews

Tags:    

Similar News