திருச்சி அருகே டிராக்டர் மோதி குழந்தை பலி
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்க முடையான்பட்டியை சேர்ந்தவர் மதி. இவரது மனைவி காயத்திரி. இவர்களது மகள் அஹ்சிதா (வயது 4). இன்று காலை இவள் வீட்டின் அருகே சாலை யோரத்தில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்ற சென்று கொண்டிருந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் விளையாடி கொண்டிருந்த அஹ்சிதா மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஹ்சிதா சம்பவ இடத்திலேயே பலியானர்.
விபத்து நடந்ததும் டிரைவர், டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தி டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.