செய்திகள்

சென்னையில் மீண்டும் நேற்று ஒரே நாளில் 5 பேரிடம் செல்போன் பறிப்பு

Published On 2018-06-26 09:54 GMT   |   Update On 2018-06-26 09:54 GMT
சென்னையில் மீண்டும் நேற்று இரவு ஒரே நாளில் 5 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னையில் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் 14 பேரிடம் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இதனை தொடர்ந்து போலீசார் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரையிலும், 4 மணியில் இருந்து 8 மணி வரையிலும் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதனையும் மீறி சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் 5 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சேகர் (26). இவர் ராயப்பேட்டை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி உள்ளார். இவர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர்.

எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த நாகராஜன் தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் அபிராமபுரம் சி.வி.ராமசாமி சாலையில் சென்றபோது அவரிடமிருந்த செல்போனையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்த ஆறுமுகம் அதே பகுதியில் உள்ள சமஸ்கிருத கல்லூரி அருகே நடந்து சென்றார். அவரிடமிருந்த செல்போனையும் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

மயிலாப்பூர் பாலகிருஷ்ணா ரோடு பகுதியில் வசித்து வரும் சாரதி என்பவரிடம், முண்டககண்ணி ரெயில் நிலையம் அருகே வைத்து செல்போன் பறிக்கப்பட்டது.

ஓட்டேரி திடீர் நகரைச் சேர்ந் தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு அவர் பணி முடிந்து ஓட்டேரி சுடுகாடு அருகே நடந்து வந்தார். அப்போது 4 பேர் கும்பல் சீனிவாசனிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரை கத்தியால் வெட்டி தப்பி ஓடி விட்டனர். இதில் சீனிவாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி திடீர் நகரைச் சேர்ந்த பெருமாள், அரவிந்தன், சுரேஷ், சர்மா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து நடந்த செல்போன் பறிப்பு சம்பவங்களால் வழிப்பறியை தடுக்க முடியாமல் போலீசார் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News