தென்காசி அருகே மின்வாரிய ஜீப் மோதி வாலிபர் பலி
தென்காசி:
தென்காசி கீழப்பாறையடி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் கோபி (23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தென்காசி-மதுரை சாலையில் அலங்கார் நகர் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மின்வாரியத்திற்கு சொந்தமான ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் ராஜா, கோபி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தென்காசி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய கோபியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான ராஜாவின் உடலை மீட்டபோலீசார் பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.