செய்திகள்

மருத்துவ கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-06-22 20:06 IST   |   Update On 2018-06-22 20:06:00 IST
மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC

சென்னை:

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி அடைபவர்கள் கலந்தாய்வு மூலம் விருப்பப்படும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். 

இந்நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற கலந்தாய்வின் போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் புதுக்கோட்டை மாணவி விக்னயா உட்பட ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும் கடந்தாண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்ட பிற மாநிலத்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறமாநிலத்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் உள்ளது. எனவே ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டவர்களின் பட்டியலை விரைவில் தாக்கல் செய்கிறோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து, இந்தாண்டு நடைபெறும் மருத்துவ கலந்தாய்வின் போது மாணவர்கள் கட்டாயம் தங்கள் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து மாணவர்களிடையே தகவல்களை பரப்ப சரியான விளம்பரம் செய்யுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார். #medicalcouncelling #Aadhaarmandatory #ChennaiHC
Tags:    

Similar News