செய்திகள்

காளையார்கோவில் அருகே மனைவியை குத்திக் கொன்ற மீன் வியாபாரி

Published On 2018-06-21 16:52 GMT   |   Update On 2018-06-21 16:52 GMT
காளையார்கோவில் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற மீன் வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காளையார்கோவில்:

காளையார்கோவில் கஸ்தூரிபாய் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 35). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(30). இவர்களுக்கு தர்ஷன்(7) என்ற மகனும், தர்ஷினி(5) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்பட்டு வந்த பிரச்சினையால் தமிழ்ச்செல்வி கோபித்துக்கொண்டு கணவரை பிரிந்து சாலைகிராமம் அருகே வலசகாடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது. இதற்காக காளையார்கோவிலுக்கு தமிழ்ச்செல்வி தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த செந்திலுக்கும், தமிழ்ச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் வீட்டில் இருந்த கத்தியால் தமிழ்ச்செல்வி சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய செந்திலை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News