செய்திகள்

மணலி புதுநகர் பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

Published On 2018-06-14 10:00 GMT   |   Update On 2018-06-14 10:00 GMT
மணலி புதுநகர் பகுதியில் 7 வீடுகளில் பணம், நகை, செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையன் சி.சி.டிவி. கேமரா மூலம் மாட்டிக் கொண்டான்.

பொன்னேரி:

சென்னையை அடுத்த மணலிபுதுநகர் பகுதிகளில் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. பூட்டப்பட்டுள்ள வீடுகளை கண்காணித்து உள்ளே புகுந்து பணம், நகை, செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கடந்த மாதங்களில் 7 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. போலீசாரால் கொள்ளையனை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் ஒரு வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைவது பதிவாகி இருந்தது. அதனை அடையாளமாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையனின் படம் பழைய குற்றவாளி மாயகண்ணன் என்கிற பாண்டியன் என தெரிய வந்தது. அவனை பிடிக்க திட்டமிட்டு கண்காணித்தனர். நேற்று முன்தினம் அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் பாண்டியன் கொடுங்கையூரை சேர்ந்தவன். அவனிடம் இருந்து 5 செல்போன், 24 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன. கொடுங்கையூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் கைவரிசை காட்டிய அவன் தற்போது மணலிபுதுநகர் பகுதியில் முகாமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தை பயன்படுத்தி அந்நாட்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து செல்வதை தொழிலாக செய்து வந்துள்ளான். போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்த பாண்டியன் தற்போது சி.சி.டிவி. கேமரா மூலம் மாட்டிக் கொண்டான்.

Tags:    

Similar News