செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் சுடுகாட்டில் மரத்தில் தூக்குபோட்டு தொங்கிய விவசாயி

Published On 2018-06-13 10:53 GMT   |   Update On 2018-06-13 10:53 GMT
வில்லியனூர் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விவசாயி சுடு காட்டில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது 41). விவசாயி. இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பஞ்சமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த தேவி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் மன வருத்தத்தில் பஞ்சமூர்த்தி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதை பஞ்சமூர்த்தியால் மறக்க முடிய வில்லை.

இதனால் மனமுடைந்த பஞ்சமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள மரத்தில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது அண்ணன் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு வேலாயுதம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News