விருதுநகர் குழந்தை கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள பருப்பு மில்லில் வேலை பார்த்தவர் ராஜ்திலக் (வயது29). இவரது 1½ வயது பெண் குழந்தை ராஜினி கடத்தப்பட்டதாக விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் அதிரடி விசாரணை நடத்தி பை-பாஸ் ரோடு அருகே குவாரியில் விட்டுச்சென்ற குழந்தையை மீட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது ராஜ்திலக்குடன் வேலை பார்த்த வெங்கடேஷ் என்பவர்தான் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தன்னை வேலையை விட்டு நீக்கிய பருப்பு மில் உரிமையாளர் சண்முககனியின் குழந்தையை கடத்த திட்ட மிட்டதாகவும், அதற்கு ராஜ்திலக் உதவாததால் கத்திமுனையில் மிரட்டி அவரது குழந்தையை கடத்தியதாகவும் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இந்த கடத்தல் சம்பவத் தில் வெங்கடேசுக்கு சென்னையை சேர்ந்த பிரபு, அசோக் ஆகியோர் உதவியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை சென்று அரக்கோணத்தில் பதுங்கி இருந்த பிரபு மற்றும் அசோக்கை கைது செய்தனர். வெங்கடேசும் கைது செய்யப்பட்டார்.