சட்டசபை கூட்டத்தை 23 நாள் நடத்த வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை
புதுச்சேரி:
அன்பழகன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இவ்வாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி உரைக்கு நன்றி கூட தெரிவிக்காமல் அவசர அவசரமாக ஒரு நாளிலேயே முடித்து வைக்கபட்டுள்ளது. அன்றைய தினமே 3 மாத அரசின் முக்கிய செலவினங்களுக்கு முன் அனுமதியும் வழங்கப்பட்டது.
தற்போது இவ்வாண்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 4-ந் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனநாயக ரீதியில் துறை வாரியாக விவாதம் செய்து நடத்த போதிய கால அவகாசம் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தெடங்கி 23 அமர்வு நாட்கள் நடைபெற உள்ளது. புதுவையிலும் நடைபெற இருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரை 23 அமர்வு நாட்களுக்கு குறைவில்லாமல் நடத்திட தாங்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்தல், துறை ரீதியான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கால நிர்ணயம் செய்ய உடனடியாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை ஒன்றிரண்டு தினங்களுக்குள் கூட்ட பேரவை தலைவர் உரிய ஏற்பாட்டை செய்திட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.