செய்திகள்

கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்தில் பயணியிடம் பணம் திருட்டு

Published On 2018-05-16 17:10 IST   |   Update On 2018-05-16 17:10:00 IST
கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்தின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பயணியிடம் பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி மேல ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தின் இருக்கையில் உட்கார்ந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்தவாறு தூங்கிவிட்டார்.

அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் சரவணன் அயர்ந்து தூங்கியதை கண்டு அவரது சட்டைப்பையில் இருந்து ரூ.600-ஐ திருடினார். திடீரென்று விழித்துக் கொண்ட சரவணன் சட்டை பையில் இருந்து பணத்தை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் பொதுமக்கள் அவரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டின் கிரேசியஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் பளுகல் பகுதியை சேர்ந்த ஜோசி (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News