செய்திகள்

மனைவியை அனுப்ப மறுத்த மாமனாருக்கு அரிவாள் வெட்டு -மருமகன் வெறிச்செயல்

Published On 2018-05-02 16:45 GMT   |   Update On 2018-05-02 16:45 GMT
தாரமங்கலம் அருகே தாய் வீட்டில் இருந்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கத்திமாறன்வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 59). விவசாயி.

இவரது மகள் சுவர்ணலதா. இவரும்அதே ஊரை சேர்ந்த பிரகாசம் என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது சுவர்ணலதா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுவர்ணலதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது தந்தை மாதையன் வீட்டிற்கு சென்றார்.

நேற்று பிரகாசம், தனது தந்தை பழனிசாமி, நண்பர்கள் கார்த்தி(20), இருசப்பன்(24) ஆகியோரை அழைத்து கொண்டு மாதையன் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசினார்.

அப்போது சுவர்ணலதாவை தன்னுடன் அனுப்பி வைக்கு மாறு பிரகாசம் கூறினார். அதற்கு மாதையன் மறுத்தார். எனது மகளிடம் தினமும் சண்டை போடுவதால் உன்னுடன் அனுப்பி வைக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மருமகன் பிரகாசம் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இரும்பு கம்பி, அரிவாளால் மாதையனை தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் வழக்குப்பதிவு செய்து பிரகாசத்தை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News