செய்திகள்

கல்லல் அருகே ஆம்னி வேனால் மோதி வாலிபர் கொலை- உறவினர் வெறிச்செயல்

Published On 2018-04-26 15:17 GMT   |   Update On 2018-04-26 15:17 GMT
கல்லல் அருகே ஆம்னி வேனால் மோத செய்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லல்:

கல்லல் அருகே உள்ள பிலாமிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ராமச்சந்திரன்(வயது 29). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். தற்போது ஊரில் வேலை செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவரும், அவரது உறவினருமான மாசிலாமணி(38) என்பவர் தன்னுடைய அண்ணன் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு ராமச்சந்திரனை கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்ய ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் மாசிலாமணி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிலாமிச்சம்பட்டியில் இருந்து கல்லல் நோக்கி ராமச்சந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் ஆம்னி வேனில் மாசிலாமணி வந்துள்ளார். கல்லல் அருகே நடராஜபுரம் பகுதியில் சென்றபோது, மாசிலாமணி தனது அண்ணன் மகளை திருமண செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து ஆம்னி வேனால் ராமச்சந்திரன் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமச்சந்திரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னதாக ஆம்னி வேனை ஓட்டிச் சென்ற மாசிலாமணி மதுபோதையில் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கல்லல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மாசிலாமணியை கைதுசெய்தனர். பின்னர் அவர் சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 
Tags:    

Similar News