செய்திகள்
பண்ருட்டி பஸ் நிலையத்தில் தகராறு செய்த டிரைவர்கள் கைது
பண்ருட்டி பஸ் நிலையத்தில் தகராறு செய்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28) தனியார் பஸ் டிரைவர். விழுப்புரம் மாவட்டம் தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (36). இவர் மற்றொரு தனியார் பஸ் டிரைவர். இவர்கள் 2 பேரும் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை குறுக்கே நிறுத்தி விட்டு ஒருவரை ஒருவர் தகாதவார்த்தைகளால் திட்டினர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பலமுறை எச்சரித்தனர். அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.