செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்- நர்சு பலி

Published On 2018-04-19 11:02 GMT   |   Update On 2018-04-19 11:02 GMT
நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நர்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பம் கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி வரலட்சுமி (வயது 30). நர்சாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று நள்ளிரவு சேப்ளாநத்தத்தில் நோயாளி ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வருவதற்காக வடலூரில் இருந்து ஆம்புலன்சில் புறப்பட்டார். ஆம்புலன்சை கிளாங்காட்டை சேர்ந்த டிரைவர் சுதாகர் (32) ஓட்டி சென்றார். குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் சென்றபோது அங்கு நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பக்கம் சேதமடைந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்சின் இடிபாடுக்குள் சிக்கிய வரலட்சுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் சுதாகர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனவே நடுரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News