செய்திகள்

மேட்டூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2018-03-28 11:02 GMT   |   Update On 2018-03-28 11:02 GMT
மேட்டூர் அருகே கியாஸ் டேங்கர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). இவரும், இவருடைய நண்பர் சரவணன்(25) என்பவரும் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் குஞ்சாண்டியூருக்கு சென்றனர்.

பின்னர் இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக இரவு 11 மணி அளவில் குஞ்சாண்டியூரில் இருந்து புறப்பட்டு நேராக கருமலைக்கூடலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கவுதம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சரவணன் உட்கார்ந்திருந்தார். நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் மேட்டூர் ராமன்நகர் என்ற இடத்தில் வந்தபோது கோவையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற கியாஸ் டேங்கர் லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் கவுதம் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். அவரது நண்பர் சரவணனுக்கு முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான இவருக்கு மனைவியும், 6 மாதம் ஆன ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News