செய்திகள்

கவுந்தப்பாடி அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து - பயணிகள் காயம்

Published On 2018-03-22 16:51 IST   |   Update On 2018-03-22 16:51:00 IST
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவர் மீது அரசுபஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
கவுந்தப்பாடி:

கரூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 11.30 மணியளவில் மைசூரிலிருந்து புறப்பட்டு கரூருக்கு வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 46) பஸ்சை ஓட்டினார். முசிறியை சேர்ந்த மனோகரன் (56) கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ்சில் பயணிகள் அதிகளவில் இருந்தனர். மேலும் பல பயணிகள் நின்றுகொண்டும் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4.20 மணிக்கு கவுந்தப்பாடியை தாண்டி ஈரோடு நோக்கி சென்றது.

கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் பிரிவில் வந்தபோது ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரில் பஸ் எதிர்பாராத வகையில் மோதியது.

மோதிய வேகத்தில் பஸ்சின்முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதன் வழியாக பஸ்கண்டக்டர் மனோகரனும் மற்றும் வாசு (35) என்ற பயணியும் வெளியே தூக்கி வீசப்பட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு பயணியும் படுகாயம் அடைந்தார்.

படுகாயத்துடன் தப்பிய கண்டக்டர் உள்பட 3 பேருக்கும் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து நடக்கும்போது அந்த வழியாக வேறு எந்த வாகனமும் வரவில்லை. இதனால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News