எச்.ராஜாவை கண்டித்து சிதம்பரம்-விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்:
தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே திராவிடர் கழகத்தினர் இன்று காலை திரண்டனர். பின்பு அவர்கள் தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் விடுதலை சிறுத்தை கட்சியினர், மனித நேய மக்கள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் செல்லப்பன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது ரபீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மூசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, புரட்சிகர மார்க்சிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தி.மு.க.சார்பில் குழந்தை தமிழரசன், வக்கீல் அருள்குமார், நகர துணை செயலாளர் ராமு, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அய்யாயிரம், திராவிட கழக மாநில இளைஞரணி இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வேலூரில் பெரியார் சிலை உடைத்ததை கண்டித்து வடலூரில் திராவிட கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்பு அவர் கள் அங்குள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடு தலை சிறுத்தை கட்சியினரும் கலந்து கொண்டனர். #tamilnews