செய்திகள்

சிவகங்கை நகரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம்-மதுபாட்டில்கள் கொள்ளை

Published On 2018-02-17 19:02 IST   |   Update On 2018-02-17 19:02:00 IST
சிவகங்கை அருகே நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு சூப்பர்வைசர் வழக்கம்போல் கடையை பூட்டிச் சென்றார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.16 ஆயிரத்து 640-ம், 33 மதுபாட்டில்களையும் திருடிச் சென்றனர்.

மறுநாள் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சப்-இன்ஸ் பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை நகரில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து 5 கடைகளில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது. இங்கு திருடிய கும்பல்தான் டாஸ்மாக் கடையிலும் கைவரிசை காட்டியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நகரில் நடைபெற்றுவரும் தொடர் திருட்டுகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. #tamilnews

Similar News