செய்திகள்

அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது: அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2018-02-15 08:22 IST   |   Update On 2018-02-15 08:22:00 IST
பட்டரைபெரும்புதூரில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடியில் 4-வது கட்டமாக பல தடைகளை தாண்டி அகழாய்வை தொடங்கி இருக்கிறோம். திருவள்ளுர் அருகே பட்டரைபெரும்புதூரில் அகழாய்வை மீண்டும் தொடங்க மத்திய தொல்லியல் துறையின் ஆலோசனை மையத்தில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் அகழாய்வு தொடங்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் அமைப்பு நடத்திய அகழாய்வில் மிகப்பெரிய வெற்றி கிடைத்து உள்ளது.

7 ஆயிரம் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவை 3 லட்சத்து 85 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆதிமனிதன் பயன்படுத்தியவை ஆகும். இந்த கண்டுபிடிப்பு உலக அளவில் போற்றப்படுகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஜூன் மாத இறுதிக்குள் அமைய வேண்டும். இதற்கான நிதி வசூல் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். தமிழ் இருக்கைக்கு போராசிரியர் நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய படிப்புக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் ஆராய்ச்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அவர் மார்ச் மாதம் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழ் இருக்கை அமைய இதுவரை 5.8 மில்லியன் டாலர் நிதி சேர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

தமிழ் இருக்கை அமைய உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் முலமாக ரூ.1 கோடியே 85 லட்சம் வந்து உள்ளது. தமிழக அரசின் முலமாக ரூ.11 கோடியே 85 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. தந்த காசோலையும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் அரசு மூலமாக நிதி தந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News