ஈரோட்டில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்க முயன்ற 21 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரன், மாவட்ட அமைப்பாளர் கராத்தே சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தனவிஜயன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், தி.மு.க.வைச் சேர்ந்த பெரியசாமி உள்ளிட்டோர் திரண்டனர்.
அவர்கள் வைத்திருந்த எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர்.
எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் குறித்து தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் கூறும்போது, “பாரதீய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா தொடர்ந்து திராவிடர் இயக்க தலைவர்களை விமர்சித்து வருகிறார். கருணாநிதி, திருமாவளவன், வைரமுத்து, பெரியார் ஆகியோரையும் விமர்சிக்கிறார். இதை கண்டிக்கும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது” என்றார். #tamilnews