செய்திகள்

கடலூரில் கடலோர காவல் நிலைய கதவை இழுத்து மூடி மீனவர்கள் போராட்டம்

Published On 2018-01-10 18:49 IST   |   Update On 2018-01-10 18:49:00 IST
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க வராததை கண்டித்து கடலோர காவல் நிலைய கதவை இழுத்து மூடி மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் கணேசன், கார்த்தி, பாபு, மகேஷ், செல்வம் ஆகிய 5 பேர் நேற்று அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க ஒரு படகில் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது திடீரென படகின் என்ஜின் பழுதடைந்தது. இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தத்தளித்தனர்.

இதையடுத்து அவர்கள் தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலையத்தை 1093 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றுமாறு கூறினார்கள்.

ஆனால் வெகுநேர மாகியும் மீட்பு படகு வரவில்லை. இதனால் மீண்டும் கடலோர காவல்நிலையத்தை மீனவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் மீட்பு படகை அனுப்ப முடியாது என்று போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு மற்ற மீனவர்களின் உதவியுடன் பழுதடைந்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கடலோர காவல் படையினர் உதவிக்கு வராததால் ஆத்திர மடைந்த மீனவர்கள், மாலையில் தேவனாம் பட்டினம் கடலோர போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். பின்னர்போலீஸ் நிலையத்தின் கதவை இழுத்து மூடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கடலோர காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனவர்கள் கூறுகையில், எங்களுக்கு ஆபத்தில் உதவாத போலீஸ் நிலையம் எங்கள் ஊரில் இருக்க வேண்டாம் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 19 மீனவர்கள் காணமால் தவித்து வருகிறோம். இந்த நிலையில் அவசர கால தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் பதில் அளிக்காத நிலை தொடர்கிறது என்று மீனவர்கள் கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய இன்ஸ்பெக்டர் சரவணன், இப்பிரச்சினை தொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் இன்று (10-ந் தேதி) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். 

அதனை மீனவர்கள் ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Similar News