கோபி அருகே நள்ளிரவில் விபத்து: வாலிபர் உள்பட 2 பேர் பலி
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தை சேர்ந்தவர் அருள் (வயது 41). இவர் அவினாசியில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் வேலை முடிந்து பஸ்சில் கோபி வந்தார். நள்ளிரவு 11 மணியளவில் கோபி காலேஜ் பிரிவில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அழைத்து செல்ல மகன் கோகுல் வந்தார். தந்தையும் மகனும் வீட்டுக்கு செல்ல நடந்து சென்றனர். நள்ளிரவு 11 மணியளவில் கோபியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென ரோட்டில் நடந்து சென்ற அருள் மீது வேகமாக மோதி அங்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஒரு மினி டோர் ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அருள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தீபன் (17), வினோத்குமார் (17), மணிகண்டன் (18) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அருள் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தீபன் உள்பட 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews