செய்திகள்

தலமலையில் யானைகள் நடமாட்டம்: மலை கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published On 2017-12-28 17:26 IST   |   Update On 2017-12-28 17:26:00 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனச் சாலை வழியாக பயணிக்கும் மலை கிராம மக்கள் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வனப்பகுதியில் தற்போது வண்ண பூரணி வனச்சுற்றுலா திட்டத்தின் மூலம் வனத்துறை வாகனத்தில் விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதியில் முக்கிய இடங்களை காண்பிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

திம்பத்தில் இருந்து தலமலை ரோட்டில் செல்லும் சுற்றுலா வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்கு களை கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது பெஜலட்டி மற்றும் ராமர் அணை பஸ் நிறுத்தத்துக்கு இடையே உள்ள சாலையோர வனப் பகுதியில் யானைகள் ரோட்டின் ஓரமாக குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக நிற்பதை காண முடிகிறது.

ஒரு சில நேரங்களில் யானைகள் திம்பம்-தலமலை வனச்சாலையில் நடமாடுவதால் இந்த சாலை வழியே பயணிக்கும் மலை கிராம மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வனவிலங்குகள் நடமாடுவதால் மலை கிராம மக்களை வனச்சாலையில் பயணிக்கும்போது கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகின்றன. உணவு, குடிநீர் மற்றும் தேவைக்கேற்ற சூழல் நிலவுவதைக்கொண்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வாழும் தன்மை கொண்டவை.

இந்தாண்டு நன்கு பெய்த பருவ மழை காரணமாக சத்தியமங்கலம் வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் யானைகளுக்கு தேவையான உணவு, குடிநீர் தேவை பூர்த்தியாகி அதிக அளவிலான யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. குறிப்பாக தலமலை வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Similar News